Tuesday, February 21, 2012

எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?


எட்டு மணி நேரம் கரண்ட் கட்! என்னதான் தீர்வு?

சிக்கல்
'மின்சாரம் நாட்டின் ஆதாரம்!’ - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிப்ரவரி மாத காலண்டரில் இருக்கும் வாசகம். ஆனால், இந்த வாக்கியத்தை தமிழக அரசு கொஞ்சம்கூட உணர்ந்த மாதிரி  தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் துறை 'டாஸ்மாக்’. மிக மோசமாகச் செயல்படும் துறை 'மின்சார வாரியம்’. இந்த இரண்டு துறைகளினால் எதிர்கால சந்ததி கடும் சவால்களையும், பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

டந்த இரண்டு வருடங்களாகவே இருந்து வந்த மின் தட்டுப்பாடு, சமீப காலமாக வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு மணி நேரமாக இருந்து வந்த மின்வெட்டு படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 8 மணி நேரமாக ஆகியிருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படுவது. அதிகாரப் பூர்வமாக இல்லாமல் என்று பார்த்தால், கிராமப் பகுதியில் பத்து மணி நேரத்திற்குகூட மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.
இந்த மின்வெட்டால் பொதுமக்கள், நிறுவனங்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிப்படைந்து மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மின்வெட்டால் லாபம் அடைந்தவர்கள், மெழுகுவத்தி, இன்வெர்ட்டர் வியாபாரிகள்தான்!

ஏன் இந்த மின்வெட்டு?
தமிழகத்தின் மின்தேவை சுமார் 11,500 மெகாவாட். குறைந்தபட்சம் இந்த அளவு மின்சாரம் இருந்தால் மட்டுமே தமிழகத்தின் மின் தேவை பூர்த்தியாகும். ஆனால், நமக்கு 3,500 யூனிட் பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டு  மொத்த உற்பத்தி திறன் 10,237 மெகாவாட். (மே 31 2011 நிலவரப்படி). ஒரு வேளை மொத்த உற்பத்தியும் நடந்தால் கூட நம் இலக்கை நாம் அடைய முடியாது.  மின் உற்பத்தியைப் பெருக்குவதில் நாம் கடந்த இருபதாண்டுகளில் எந்தவொரு பெரிய முயற்சியும் செய்யவில்லை என்பதே இந்த பற்றாக்குறைக்கு அடிப்படை காரணம்.
அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின் நிலையங்கள்தான் தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கு மிக முக்கியமான ஆதாரம். தமிழகத்தில் நான்கு அனல் மின் நிலையங்களில் உள்ள 17 யூனிட்கள் மூலம் ஆண்டுக்கு 2,970 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த 17 யூனிட்களும் ஆண்டு முழுக்க இயங்கிக் கொண்டே இருக்காது. இதில் 17 யூனிட்டில் ஏதாவது ஒன்று (சில சமயம் இரண்டு யூனிட்கள்கூட) பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும். ஒரு யூனிட்டை முழுக்க பராமரிப்பு பணி செய்து முடிக்க 25 முதல் 40 நாட்கள் வரை தேவைப்படும். தற்போது கூட வட சென்னை அனல்மின் நிலையத்தின் ஒரு யூனிட் பராமரிப்பில் இருக்கிறது.
இது ஒருபக்கமென்றால், அந்த யூனிட்களே பழுதாகி உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும். கடந்த வாரத்தில்கூட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட் பழுதாகி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிபார்க்க குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகும்.
அனல் மின் நிலையத்திற்கு அடுத்து நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைப்பது நீர் மின் நிலையங்கள் மூலம். இதன் மூலம் 2,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், குறைந்து வரும் மழை அளவால் நீர் மின்சாரத்தை நம்மால் பெரிய அளவில் நம்ப முடியாது. எனவே, 2,190 மெகா வாட் என்ற உற்பத்தியை நாம் ஒருபோதும் அடையவே முடியாது.
பெருகும் தேவை!
உற்பத்தியை உயர்த்த முடியாதது ஒரு காரணம் என்றால், தேவையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2001-ல் தமிழகத்தின் மின் தேவை 5,580 மெகாவாட் மட்டுமே. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆனால், எந்த புதிய திட்டங்களுமே இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் மென்பொருள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததை தமிழக அரசு கவனிக்க தவறிவிட்டது.
மேலும், நடுத்தர மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், மின்சார அடுப்பு போன்றவற்றால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. சமீபத்திய கேஸ் தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு, எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்துவது கடுமையாக அதிகரித்திருக்கிறது.

உற்பத்திக்கு வழியில்லை!
1930-ம் ஆண்டுகளிலே 69 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின் நிலையத்தை பைகாராவில் அமைத்தது தமிழகம். 1930களில் இருந்த தொலைநோக்கு திட்டம் 1990-களில் நமக்கு இல்லை.
1994-ம் ஆண்டு வட சென்னை அனல் மின்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகான 18 வருடங்களில் எந்த பெரிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. விரிவாக்கப் பணிகள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வந்தது.
1987-ம் ஆண்டு காடம் பாறையில் 400 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கப் பட்டது. அதன்பிறகு இவ்வளவு பெரிய நீர் மின் நிலையத்தைத் தமிழகம் அமைக்கவில்லை. 2, 3 மெகாவாட் திறன் கொண்ட யூனிட்களே  அமைக்கப்பட்டன. சுருக்கமாக, கட்சி, ஆட்சி வித்தியாசம் இல்லாமல் கடந்த 20 வருடங்களில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த உருப்படியான திட்டமும் வரவில்லை. ஆனால், குஜராத்தில் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் கிடைப்பதால், உற்பத்தியை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஏன் இல்லை புதிய திட்டம்?
இதற்கு இரண்டு காரணங் களைச் சொல்கிறார்கள் மின் வாரிய அதிகாரிகள். முதலாவது, மின் பற்றாக்குறை இருக்கும்போது, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம், நிலக்கரி முதலிய வற்றை வாங்கலாம். அப்படி வாங்கும் போது நிறைய கமிஷன் பெறலாம் என்பது அரசியல்வாதிகள் எண்ணம். இரண்டாவது, புதிய மின் நிலையங்களை அமைக்கும் அளவுக்கு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை. தற்போதைய நிலையில் சுமார் 45,000 கோடி ரூபாய்க்கு கடனில் தவிக்கிறது மின் வாரியம். இந்த கடன் வரும் வருடங்களில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கழுத்தை நெரிக்கும் இந்த கடனுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை.  முதலாவது, கடந்த பத்து வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என்று பயந்தே இதில் கை வைக்காமலே விட்டுவிட்டன தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்கள்.
இரண்டாவது, மின் உற்பத்திக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு டன் நிலக்கரியின் விலை 2,160 ரூபாய், இப்போது 5,880 ரூபாய். இது மட்டுமல்லாமல், ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட அத்தனை உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரிக்கும் நிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்தத் தேவையான பணத்திற்கு மின் வாரியம் எங்கே போகும்?

என்னதான் தீர்வு?
உடனடி மற்றும் நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டிய விஷயங்கள் என நிபுணர்கள் சொன்னதை இங்கே பட்டியல் போடுகிறோம். முதலில் உடனடி யாகச் செய்ய வேண்டியது.
சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த திட்டங்கள் விரைவில் செயல்படத் தொடங்க போகிறது. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இவற்றிலிருந்து முழுமையான உற்பத்தி கிடைத்தால் மட்டுமே தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை தீரும்.
ஆனால், இந்த மின்சாரத்தைக் கொண்டு சில மாதங்களை மட்டுமே ஓட்ட முடியும். நமது மின்சாரத் தேவை சராசரியாக ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, மீண்டும் ஒரு பெரிய பற்றாக்குறை வர வாய்ப்புண்டு.  அதை சமாளிக்க இப்போதே அதற்கான வேலைகளில் இறங்குவது நல்லது. 
18,000 கோடி ரூபாய் செலவில் 4,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அல்ட்ரா மெகா பவர் பிளான்டை சென்னையை அடுத்த செய்யூரில் அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பு 2008-ம் ஆண்டு வந்தபோதும், இன்னும் பெரிய அளவில் வேலைகள் நடக்கவில்லை.
அணு மின் உற்பத்தி அதிக செலவில்லாதவை என்றாலும், அதனால் தங்களுக்குப் பாதிப்பு வருமே என்று நினைத்தே மக்கள் அதனை எதிர்க்கின்றனர். ஆனால், பாதிப்பு வராதபடிக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் எடுத்துச் சொல்லும் பட்சத்தில் அதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். இதனால் அணு மின் உற்பத்தி செய்ய வழி பிறக்கும்.
குந்தாவில் 600 மெகாவாட் (4ஜ்125) உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தை அமைக்க முடியும். ஆனால், இந்த திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.  இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் போது கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
இதேபோல ஒகேனக்கலிலும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையத்தை அமைக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கையை இதுவரை அரசு எடுக்கவில்லை.
சூரிய மின்சக்தி இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. (ஒரு யூனிட் தயாரிக்க 18 ரூபாய் வரை செலவாகிறது. அனல் மின் நிலையம் மூலம் என்றால் 4 ரூபாய்தான்!) ஆனால், குறைந்த செலவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து முயற்சிக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தர வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். எதிர்கால வளர்ச்சி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தித்து, செயல்படுகிறவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற வேண்டும்.
'மின்சாரம்தான் நாட்டின் ஆதாரம்’ என்பதை இனியாவது அரசாங்கம் உணர்ந்து,  அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பதே இன்றைக்கு புழுங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனின் கோரிக்கை.


this article is taken from vikatan.com, it not written from me credit goes to the vikatan.com.
ref: http://www.vikatan.com/article.php?aid=16434&sid=448&mid=6

Wednesday, January 4, 2012

மாறுவது உலகு

இந்த வருடம் சற்று சோம்பலாகவே புது வருடம் தொடங்கியது. இரவில் கிடைத்த வாழ்த்து செய்திகளை மேலோட்டமாக பார்த்தவாறே காரில் படிந்து இருந்த பனிதுளிகளை துடைத்து விட்டு பெங்களுருக்கு கிளம்பினேன்.

திருச்சி- நாமக்கல் சாலை பனி மூட்டத்தில் சோம்பி கிடந்தது. 2012யை எந்த மன நிலையில் வரவேற்ப்பது என புரியாமல் காவிரி கரையை ஊடாக செல்லும் சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன்.லேசான மக்ழ்ச்சி..திருச்சி அப்புறம் கொடைக்கானல் FM ரேடியோக்களில் எல்லோரும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டு இருந்தார்கள்.

2011 ஆண்டு இப்படி தொடங்கவில்லை.. ஐடி வேலையின் இருண்ட பக்கங்களில்  நானும் ஒருவனாக இருந்தேன். வேலை அயர்ச்சி..16 மணி நேர வேலை.. சில மணி நேர தூக்கம், விழிப்பு பின் கண்ணியில் தொடர்சியான வேலை.. ஏமாற்றம், போராட்டம், சலிப்பு என முதல் இரண்டு மாதங்களில் யோசிக்க கூட முடியாமல்  ஓடி கொண்டு இருந்தேன்.

ஆதரவு இல்லாத அலுவலக நட்புகள் வேறு மறுபக்கம்.. கூடவே அலுவலக அரசியலில் தொல்லை.. இப்படியே இந்த வருடத்தில் பல மாதங்கள் ஓடி போனது. மே ஜீன் ஜீலை மாதங்கள் வாழ்க்கையின் விரக்க்தியின் உச்சகட்டம்.. ஏகப்பட்ட இழப்புகள்.

பண விரயம் மன விரயம்... அவமானங்கள் திட்டுகள் ஏமாற்றங்கள் ஆதரவு இல்லாத நிலை..இது தான் வருடத்தில் பல நாட்க்கள் சந்திந்தது.

ஒரு சில சிறு விழயங்கள்  கூட பலவாறு இழுபறிப்புகள் இழப்புகளோடு தான் முடிந்தது

2011 வருடத்தில் பெங்களூரில் இருக்க முடியாமல் பல நாட்கள் காரில் பயணம்.. கும்பகோணம் வட்டாரத்தில் கோவில் தரிசனம் என பல நாட்க்கள் கழிந்தது.  வேறு வேலை தேட முயண்ற போது நிதர்சனம் முகத்தில் அறைந்தது. பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால் புதிய தொழில் நுட்பங்கள் ஏதும் தெரியாமல் இருந்து விட்டேன்.

இடையில் அலுவலக அரசியலால் தண்டை குற்றம் போல ஏதோ ஒரு ப்ராஜக்ட்க்கு அனுப்பபட்டேன்.

புதிய மேலாளர் ஆதரவாக இருந்தார். ஆனாலும் நான் இழந்த எதையும் அவரால் கொடுக்க முடியவில்லை. எதிர்பார்ப்பதும் தவறு.

முகத்தில் அறைந்த அவமானங்கள் மேலும் போராடிய தூண்டியது. பொறுமையை கற்று தந்தது. மனிதர்களை மன்னிக்க கற்று தந்தது.

 பின் ஒரு நன்நாளில் நானே எதிர்பார்க்காத ஒரு நிறுவனத்தில் அழைப்பு.. அரை நாளில் இண்டர்வியூ எல்லாம் முடிந்தது. மாலையில் HR நீ செலக்ட் ஆயிட்டே என்று சொன்ன போது இது நாள்வரைக்கு பட்ட கழ்டங்கள் எல்லாம் இதற்க்குதானா என்று தான் தோன்றியது. மீண்டும் இரண்டு மாதங்கள் காத்திரிப்பு ஆர்டர் வாங்க. ஆர்டர் வாங்கிய அன்று கொடைக்கானலில் இருந்தேன். சந்தோஷத்தின் உச்சகட்டம்..

இரண்டு மாதங்கள் notice period என்று ஓடி போனது. மேலும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் 2011 ஓடி போனது. பொறுமையாக இந்த பதிவை டைப் செய்யும் இந்நாள் என் வாழ்நாளில் கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்த நிறுவனத்தில் நான் வேலை செய்யும் கடைசி நாள். 2012 புதிய நிறுவனத்தில் சளைக்காமல் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் உற்சாகத்துடன் தொடங்குகிறேன்.

நான் தோற்றவன் இனி மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலையில்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Thursday, June 23, 2011

No Problem Sir

வழக்கம் போல இன்னிக்கும் ஒரு வார இறுதி வெள்ளிகிழமை..


கடைசி நாள், எல்லா அப்ரைசைல் மீட்டிங் முடிக்க வேண்டும்..


இருப்பதோ 8 மணி நேரம்.. கடைசி 4 பேர்..ஒருத்தருக்கு ஒரு மணி நேரம்.. 4 மணி நேரம் ஓடி விடும்..அப்புறம் வெட்டி மெயில் ரிப்ளை பண்ண வேண்டும்..சாப்பாடு சிகரேட் காபி டீ அடிக்கடி குறிக்கிடும் தொந்தரவு எல்லாத்தையும் சிரித்து கொண்டே பதில் சொல்ல வேண்டும்.. MNCயில் வேலை  என்றால் சும்மாவா..


மாதம் சுளையாக 2 லட்சம் சம்பளம்..யார்கிட்டயும் சொல்லாதீங்க...tax அப்புறம் மிச்ச சொச்சத்தையேல்லாம் பிடிச்ச பின்னாடிதான்..


இந்த சம்பளைத்தை வைச்சுதான் என் குடும்ப சாப்பாடு, ஹோம் லோன் , கார் லோன், பெர்சனல் லோன், குழந்தை ஸ்கூல் பீஸ் மாசம் இரண்டு தடவை பிவிர் ஆர் சினிமா வீட்டுக்கு சோபா ஏசி எல்லாத்தையும் மேனேஜ் செய்யனும். ஊருக்கு போனா பணத்தை விட்டு எறியனும்...என்ன மாச கடைச்யில் ஒரு ஆயிரம் ரூபா கணக்கில் இருக்கும். ஆனா நானும் ஐடி பொறியாளர் இல்ல இல்ல மேனேஜர்....


இந்த அப்ரைசல் ரேட்டிங்கில் என் பங்கு ஏதும் இல்லை..எல்லாம் எனக்கு மேல இருக்கறவங்க போடறது..என் வேலை தம்பி இது தான் உன் வேலைக்கு கிடைச்ச மதிப்புன்னு சொல்றதுதான். வெள்ளிகிழமை பொதுவா நல்ல நாள்..வேலையை விட்டு அனுப்புறதோ ..அப்புறம் என்ன கேடு கெட்ட காரியங்கள் பண்றதா இருந்தால் வெள்ளிகிழமை தான் தோதுவான நாள்..


.அப்ரைசலில் வேலைக்கு ஆகாத ஆட்களுக்கு உன் ரேட்டிங்க் இது தான்ன்னு சொல்லி நேரத்தை ஓட்டி அனுப்பனும்.. என்ன கேவலமான ரேட்டிங் கிடைச்சா அவனுங்களே ஒடிடுவாங்க..இல்லேன்னா ஒரு மாசம் தாக்கு புடிப்பாங்க வேற வேலை கிடைக்கிற வரை.. என் வேலை அவனுங்கிட்ட பக்குவமா அமைதியா சொல்றது தான்..


இன்னிக்கு யாரோ ...
வழக்கம் போல மெயிலில் வந்த லிஸ்டை படித்தேன்..


-*-




நாலு பேரில் ஒருத்தன் ..சிவா..இவன் எப்படி இந்த லிஸ்டில். நல்ல பையன்..நல்லா வேலை பார்பான்..இவன் கிட்ட கொடுத்த வேலை எதுவும் திரும்ப வந்ததே இல்லை..இரண்டு மாசம் முன்னாடி இவன் பண்ணின ப்ரோகிராமால் பெரிய வேலை கூட ஒன்னுமில்லை ரொம்ப சிம்பிள்ன்னு சொன்னாங்க.. வேலைக்காத ப்ராஜட் கூட இவன் இருந்தா சக்ஸஸ் ஆகும்..


இவன் பேரு எப்படி இந்த லிஸ்டில்..??


எனக்கே நம்ப முடியவில்லை..வாங்கிற சம்பளத்து பேஸ்புக் ஆர்குட்ன்னு நோண்டாம வேலை செய்கிறவன்..இவன் எப்படி..விசாரிக்கனும்..


ஹ்லோ இது சுனிலா?? என்ன சார் சிவாவை ப்ளாக் லிஸ்டில் போட்டு வைச்சு இருக்கீங்க !!??


ஏதும் கேக்காதீங்க..எல்லாம் அந்த மீனா பண்றது..இவன் அவ போட்ட டிசைனில் ஏகப்பட்ட குறை கண்டு புடிச்சு மெயில் அனுப்பினானாம் !! அதுக்கு ஒன்னும் தெரியாது..உண்மையாதான் சொல்லி இருப்பான்..ஆனா மீனா 10 வருசமா இந்த கம்பனியில் இருக்கு அது தான் சீனியர் ஆர்க்கிடெக்ட்..இவனுக்கு எதுக்கு இந்த வேலை??அதை எதுத்து என்ன கேள்வி கேட்டாலும் இதுதான் நிலைமைன்னு தெரியாதா??அது எல்லா சீனியர் மேனேஜர்கிட்டயும் இவன் வேஸ்ட்ன்னு feedback கொடுத்து இருக்கு..என்னாலும் ஒன்னும் பண்ண முடியாது,,எப்படியாவது அவனை சரிகட்டி அனுப்பு...


-*-




ம் என்னாலும் ஏதும் செய்ய முடியாது,,ஐடி வேலை அடிமை வேலை..இங்கு வாய் இருப்பவன் தான் பிழைக்க முடியும்...வாய் இல்லாதவன் எல்லாம் அடிமையாக சாக வேண்டியது தான்..எனக்கு வாய் ரொம்ப இருக்கு தெரிந்து தான் இந்த வேலையில் என்ன போட்டாங்க..ஆனா எப்படி இந்த சிவாவை ஹேண்டி செய்யறது..க்ளீன் ரிப்போர்ட்..ஏகப்பட்ட client regimentation வேற ..எப்படியோ செய்யனும்..மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் பாரதிராஜ படத்தி வரும் தேவைதைகள் ஆயிரம் நோட்டாய் என் மேல் பறந்தது.. பிவிஆர் கோல் க்ளாசில் சினிமா பார்க்கும் போது என் தேவதை கொடுக்கும் smileக்கு முன்னாடி ஏதும் பெரிது இல்லை..


ஹாய் சிவா
ஹலோ சார்.


வழக்கமான பேச்சுக்கு பின்னர்..


சிவா உனக்கு இந்த வருசம் ரேட்டிங் D தான் கொடுத்து இருக்கோம்..உனக்கு கிடைச்ச feedback..நீ ரொம்ப கேவலமாக கோட் பண்றே.. எந்த வேலையும் சரியாக செய்யலே..


சார் உங்களுக்கே தெரியும்


என்ன தெரியும்


எல்லாம் மீனா மேடம்..


சிவா be professional..


ஒக்கே சார்


கொடுத்த ரேட்டிங்க வாங்கிக்கோ இல்லை HRகிட்ட பேசலாமா??


no problem sir..


என்னிடம் கை கொடுத்து விட்டு ரேட்டிங்க் வாங்கிட்டு உடனே போய்ட்டான்..அடுத்த ரெண்டு நாளில் வேலையை விட்டு போய் விட்டான் என்று யாரோ சொன்னார்கள்..வேற வேலை அவனுக்கு கிடைச்சிதா ?? அவனுக்கு family இருக்கா என்ன செய்கிறான்னு யாருக்கும் தெரியவில்லை ..காலை 9 மணி முதல் ராத்திரி 10 மணி வரை ஆபிஸே கதியேன்னு இருப்பான்....பாவம் அவனை இப்படி .....


-*-


வழக்கம் போல இன்னிக்கு மேனேஜர் மீட்டிங்க்...
ஹ்லோ எல்லா ப்ரோஜட்ட்டும் red status..எல்லாரும் என்ன பண்றீங்க..இந்தியா செண்டரை மூடிலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க.. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் ப்ராஜட்டும் greenக்கு வரனும் இல்லேன்னா எல்லாம் அவ்வளவுதான்..தெளிவான ஆங்கிலத்தில் அந்த வெள்ளைகாரன் சொல்லிவிட்டு போயிட்டான்.. எப்படி வரும்..மேற்கே சூரியன் உதிச்சாதான் வரும்.,,,,நானும் இங்க இருந்து கிள்ம்ப வேண்டியது தான்..கிள்ம்பியே ஆகனும்...போடு resumeயை naukriயில்..


சார் , இந்த வாரம் 10 மணிக்கு உங்க இண்டர்வியூ மறக்காம போங்க பெரிய MNC உங்க கம்பேனியை விட பத்து மடங்கு பெரிசு , take home 3 L தருவாங்க.. மறக்காம போங்க.. தனக்கு கிடைக்க வேண்டிய ஒரு மாத சம்பளத்துக்காக பத்து தடவை போன் செய்த கன்சல்டன்சி ஆள்..


போயே ஆகனும்..இனிமே இந்த வேலை சரி வராது..


சரி எங்க இண்டர்வீயூ..தாஜ் கோரமண்டலில் சார்...5th floor..


ம் இண்டர்வீயூ கூட பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடத்தும் கம்பனி..வேலை கிடைச்சா அப்படியே என் தேவதைக்கு வீட்டிலே 10 ஸீபிக்கர் வைச்சு பிவிஆர் தியேட்டர் போல படம் காட்டுவேன்..பெரிய கார் வாங்கி பெட்ரோல் போட்டு எல்லாருக்கு சீன் போடலாம்...




சரியான நேரத்துக்கு வந்தாச்சு !!
சார் நீங்க *** தானே உக்காருங்க உங்களை எம் டி இப்பவே கூப்பிடுவாங்க..


மேஜையில் கிடந்த டைம்ஸ் ஆப் இந்தியாவில் வழக்கம் போல பாக்கிஸ்தான் அனுகுண்டு அப்படியே தனுஷ்கோடியை தான் அடிக்க போவுதுன்னு கதை இருந்தது...


சார் உள்ள போலாம்..


போகும் போது ஏதோ தெரிந்த முகம்..


இது மீனா தானே...இவ எங்க..என்ன பாக்கலியே.. இவளும் வேலை தேடறாளா..பெரிய கையாச்சே இவளுக்கு பிரச்சனையா ??இவளுக்கு பிரச்சனைன்னா நான் எல்லாம் எங்கே..


சார் உள்ளெ வரலாமா !!


வாங்க மிஸ்டர் ****..


நாற்காலியில் அதே சிவா கோட் சூட் போட்டு கம்பீரமாக ....


பேக் கிரவுண்டில் யுவன் சங்கர் ராஜா வழக்கம் போல மூக்கால் சத்தமாக ஏதோ பாடி கொண்டு இருந்தார்..







Thursday, September 24, 2009

சென்னையில் வீதி உலா

சென்ற வாரம் தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை.

கூர்க் மைசூர் தசரா என ஏகப்பட்ட திட்டம் போட்டும் மிக பெரிய தோல்வி..:(

சென்னை பக்கம் விடுமுறைக்கு ஒதுங்கலாம், நண்பர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சிறு திட்டம்.

பெங்களூரில் இருந்து உலகத்தின் எந்த இடத்துக்கும் weekendல் டிக்கேட் கிடைத்து விடும், ஆனால் சென்னை செல்வது மட்டும் சான்ஸே இல்லை. பகல் இரவு பஸ்ஸோ டிரையினோ எங்கும் மக்கள் வெள்ளம் தான். எப்படியோ பகல் நேர பேருந்தில் இடம் பிடித்து சென்னைக்கு தொடங்கியது.

எனக்கு பகல் நேர பயணம் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்க்கவே வேண்டாம்.

சாலைகளின் ஆங்காங்கே தென்படும் சாதாரண மனிதர்களும் பெயரை படிப்பதற்க்குள் மறைந்து போகும் பெயர் பலகைகளும் எப்போதும் சுவாரசியமானவை.

எங்கோ திடீரென்று சாலையில் ஒதுங்கி இருக்கும் மோட்டல்களும் அதன் மனிதர்களையும் பகல் நேரத்தில் பார்க்க வெகு ஆச்சர்யமாக இருக்கும்..

Bangalore electronic cityயை தாண்டியவுடன் சாலைகளில் தென்படும் தமிழ் எழுத்துகள் மனதுக்குள் சிறிய புன் சிரிப்பை விட்டு செல்லும்.

- * -

நான் சென்னையில் வசித்தது நிரந்தரமாக வசிக்க நினைத்து இருந்தது சில மாதங்கள் மட்டுமே..

அடிக்கடி சொந்த வேலையாக வரும் போது ஒவ்வோரு முறையும் சென்னை நகரம் ஏதேனும் பாடங்களை கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது.

என்னுடன் பெங்களூரில் வசித்த முக்கால்வாசி நண்பர்கள் என்றோ சென்னையை நோக்கி சென்று விட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் பிடித்த பல விசயங்கள் எனக்கோ பிரச்சனைகளாக தெரிகிறது..


சென்னை நகரம் மாறி கொண்டே வருகிறது, எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறது... காஞ்சிபுரம் பைபாஸ் தாண்டியவுடன் புத்தம் புதுசாக ஏகப்பட்ட மருத்துவ கல்லூரிகள் முளைத்து இருக்கிறது. . பெயர் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில் காஞ்சிபுரம் வரை சென்னையின் எல்லை என யாரேனும் சொன்னாலும் சொல்வார்கள்.

என் நண்பன் மிகவும் மும்முரமாக மேல் மருவத்தூரில் வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறான். அங்கேயும் 20 லட்சத்திற்க்கு குறைந்து இடம் இல்லையாம்..

திருமுல்லைவாயில் ஆவடி பக்கம் எல்லாம் சில ஆண்டுகள் முன்னர் வரை பாசனம் செய்து வந்த இடங்கள். இன்றையை நிலை சொல்லவே வேண்டாம்..

சென்னை நடுத்தரவாசிகள் நகரம் என யார் சொன்னது?

- * -

பெங்களூரில் தினமும் 3 கிலோ மீட்டர் ஜாகிங் செல்லும் போது எட்டி பார்க்கும் வியர்வை துளிகள் சென்னையில் இரவு எட்டு மணிக்கு எந்த வித உடல்உழைப்பும் இல்லாமல் எட்டி பார்க்கிறது. இரவில் அட்டகாசமாக வெப்ப காற்று வேறு. பகலில் சொல்லவே தேவை இல்லை..சாலையில் ஏஸி போடாமல் எந்த காரும் செல்வதில்லை. பரவலாக அனைத்து நடுத்தர வர்க வீடுகளிலும் ஏஸி இருக்கிறது. சாதாரண ஷாப்பிங் கடைகளிலும் ஏஸி.. என் நண்பனின் கடையில் தினமும் குறைந்தது 50 ஏஸி சாதனங்கள் விற்பனையாகின்றன. சென்னை கூடிய விரைவில் துபாயை மிஞ்சி விடும்.

-*-
வழக்கம் போல ஆட்டோகாரர்கள் ஏமாற்றினார்கள், பர்ஸை ஜீன்ஸின் புறபாக்கேட்டில் ஒளித்து வைத்து ரங்கநாதன் தெருவில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முறை சரவணா ஸ்டோர்ஸை விட போத்திஸில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. வழக்கம் போலவே சென்னை தி நகர் கடைவாசிகள் கஸ்டமர் சர்வீஸ் கண்டு மனசுக்குள் திட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இந்த நவராத்திரியிலும் மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் கொலு வைத்து சுண்டல் கொடுக்கிறார்கள்.

சில புதியவைகள் கண்ணில் பட்டன. தி நகர் பக்கம் சுத்தமாக தமிழ் தெரியாமல் பீகார் வாசிகள் சின்ன சின்ன உணவகங்கள் நடத்துகிறார்கள். மக்களும் அரைகுறை இந்தியில் சளைக்காமல் பேசி சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். நிறைய UP MP MH DL வண்டிகள் கண்ணில் பட்டது.

திருவான்மியூர் பக்கம் சாதாரண ஷேர் ஆட்டோகாரர் கூட இந்தியில் பேசி கஸ்டமர் பிடிக்கிறார்.

ஆனால் ஒரிஜனல் சென்னைவாசிகளுக்கோ இதனால் பல பிரச்சனைகள்..இந்திகாரர்கள் பேரம் பேசாமல் வீடு வாடகைக்கு பிடிக்கிறார்கள்.. இதனால் விலை வாசி ஏறி போச்சு என்ற கூப்பாடு வேறு...

சில அபார்மெண்ட்களில் சிண்டிகேட் வைத்து வீடு வாடகையை control செய்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். புரோக்கர் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.. வீட்டு வாட்ச் மேன் கள் முதல் தெரு குட்டி தாதா வரை எல்லாரும் புரோக்கர் ஆகி விட்டார்கள். சென்னையில் இனி தனியாளக வீடு தேடி பிடிப்பது முடியாத காரியம் ..

-*-

சென்னையில் எதற்க்கும் ஒரு விலை இருக்கிறது போலும். ரொம்ப சாதரணமாக ‘ யாராக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற டயலாக் காதில் விழுந்தது. பேச்சு அதுவும் அதிகாரமாக அதட்டி பேச தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் போல. சாதாரண சிம் காட்டு வாங்க கூட சிபாரிசு கூட்டி வருகிறார்கள். சாலையில் சின்ன சின்ன போக்குவரத்து தவறுகளுக்கு கூட குடும்பத்தை இழுக்கிறார்கள்.

சாலையில் சிக்னலில் நிற்க்கும் போது கூட கூச்சமே இல்லாமல் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை போட அனைவரும் தயார் என்ற மன நிலையில் இருப்பதை போல பிரமை..

அடையாரில் ஒரு சிக்னலில் ஹெல்மெட் போடாத யாரோ ஒருவரை போலிஸ்காரர் ஓரம் கட்டிய போது உடனே மொபைலில் யாரையோ துணைக்கு அழைத்து மொபைலை போலிஸ்காரரிடம் கொடுத்து பேச சொன்னார். போலிஸ்காரரும் சளைக்காமல் மொபைலை வாங்கி ஸ்விச் ஆப் செய்து பைக் சாவியை எடுத்து வைத்து கொண்டார்.

ம் இந்த நகரத்தில் அவருக்கும் அவர் வேலையை பார்க்க தனி திறமை தெரிந்து இருக்கிறது.

என்னால் ஐந்து நிமிடத்து மேல் சென்னை நகர சாலைகளில் நண்பனின் காரை ஓட்ட முடியவில்லை. ஆனால் நான் பார்த்த பெரும்பாலன சென்னை கார்கள் எந்த வித வெளி காயமும் இல்லாமல் இருக்கிறது.

பெங்களூரில் சர்வசாதரணமாக 200 ரூபாய் ஆகும் lunch buffet சென்னையில் சரவணபவனில் 120 ரூபாய்க்கு கிடைக்கிறது. சூப்பர் இட்லி கடைகள் மலிவான விலைக்கு ருசியான சாப்பட்டை தருகிறார்கள்....என்னதான் ஏஸி வைத்து இருந்தாலும் மின்சார செலவு மாதம் 200யை தாண்டவில்லையாம்.. தண்ணீர் பிரச்சனையும் முன்பு போல இல்லை...மின்சார ரெயில் நேர சிக்கன பயணம் வால்மீகி நகர் பீச்... என்ன சில நொட்டைகள் இருந்தாலும் சென்னை போல வருமான்னு நண்பன் சொன்ன போது சரிதான் என தலையாட்டினாலும் , சென்னைக்கு நானே வர நினைத்தாலும் அங்கு இனி இருக்க இடம் இருக்காது என்று தான் தோன்றியது.





Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்



இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.


இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??


ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..

அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..


சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,

போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..


4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??

எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??


நம்மவர் கெட்டப்பில் கமல் ...

பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.

இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..

எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

மோகன்லால்..

விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.

மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

இசை

படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..

பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..

விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..

உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.

Saturday, September 5, 2009

Saturday, August 29, 2009

ஊர் வம்பு -1


யார் வம்புக்கும் போகாம இருந்தா வம்பு நம்மை தேடி வராது

இதேல்லாம் சும்மா டூப்பு.


என்ன நேரமோ காலமோ தெரியலை வம்பு தேடி தேடி ஆளை கொல்லுது.

பொதுவாக நான் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தான் பைக்கிற்க்கு பெட்ரோல் ஆகாரம் கொடுப்பது வழக்கம்.


நான் வைத்து இருக்கும் citi bank debit cardகளில் வேறு நிறுவன பங்குகளில் இதே debit card பயன்படுத்தினால் 10 ரூபா கொசுறாக சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் account statementகளில் ஞேஎன்று எட்டி பார்க்கும்..

இந்த கொசுறு எதுக்கு என்று சண்டை போட்டு முடிவு இது வரை இல்லை.

சரி indian oil நிலையதிலேயே பெட்ரோல் போடலாம் என்று அரைமனதாக முடிவு செய்து ஒரே பங்கையே உபயோகித்து வருகிறேன். எல்லாம் நல்லா தான் இருந்தது..

சில நாட்களாக பைக்கில் கணிசமாக மைலேஜ் குறைந்து கொண்டே வந்தது.. ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்த வண்டி 40 35 என குறைந்து கொண்டே வந்தது. ஓட்டும் முறையில் ஏதும் மாற்றம் இல்லை.. hose போட்டு பெட்ரோலை உறியவும் வாய்ப்பு இல்லை.. என்னமோ நடக்குது.. பொருமையாக யோசித்து பார்த்தில் பெட்ரோல் போடும் போதே லம்பாக தில்லு முல்லு செய்தே பெட்ரோல் போடுவது பிடிபட்டது.

பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போதே சார் cardஆ cashஆ , சார் சீக்கிரம் கார்டு கொடுங்க.. பின் நம்பர் கேட்க்குது என எப்படியாவது கவனத்தை திசை திருப்பி தில்லாங்கடி செய்வது தெரிந்தது. ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர்கள் ஆலோசனையோடு பெட்ரோல் நிரப்பும் போது அந்த h1n1 வைரசே வந்தாலும் திரும்ப மாட்டேன் என உறுதி பூண்டு ஜெயித்து விட்டேன்..

ஆனால் இந்த முறை புது மாதிரியான தில்லுமுல்லு.. பெட்ரோல் போடும் போதே மின்சாரம் போய் விடும் ..அல்லது எந்திரத்தில் ஏதாச்சும் கோளாறு ஆகும்.. உடனே ஒரு சூப்பர்மேன் போல ஒருவர் வருவார் ...பட்டனை தட்டுவார்.. மீண்டும் பெட்ரோல் வரும்..

சார் 300 ரூபாக்கு பெட்ரோல் போட சொன்னீஙக கரண்ட் போவதற்க்கு முன்னால் 80 ரூபாவிற்க்கு பெட்ரோல் போட்டாச்சு பாலன்ஸ் 220 ருபாவிற்க்கு போடனும் மீட்டரை பாருங்க.. 80விற்க்கு பெட்ரோல் போடாங்களா இல்லையா மீட்டர் ஓடிச்சா இல்லையா ..??
இந்த முறையும் நல்லா ஏமாந்து சோனகிரியா 300 ரூபா பெட்ரோலில் 80 ரூபா கோவிந்தா கோவிந்தா..

இந்த முறை விட கூடாது..

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரையாவது இவர்கள் ஏமாற்றுவார்கள், ஒருத்தருக்கு 50 ரூபா என்றால் நாள் ஒன்றிக்கு 5000 ருபா வேலை பார்க்கும் 5 பேருக்கும் லாபம் பிரிக்கபடும்..

இணையத்தில் நோண்டிய போது இந்தியன் ஆயில் விஜிலென்ஸ் நம்பர் கிடைத்தது.. இந்தமுறையும் விட கூடாது..

சார் இதே பிரச்சனை தான் சார், அளவு சரியா இருககான்னு நாங்க அடிக்கடி சோதனை நடத்துறோம் அதனலால் லிட்டர் அளவை இப்ப யாரும் மாத்துறது இல்லை.. அதுக்கு பதிலா பெட்ரோல் போடமலே பெட்ரோல் போட்ட மாதிரி ப்ராடு பண்றாங்க ..எந்த ஏரியா பங்க சார்..??

கூடவே விஜிலென்ஸ் அதிகாரி வந்தார்..என் பைக்கில் இருக்கும் மொத்த பெட்ரோல் அளவு குறிக்கபட்டது.. சார் நீங்க வழக்கம் போலவே பெட்ரோல் போடுங்க.. தில்லுமுல்லு ஏதாச்சும் செய்தாலும் கண்டுக்காம பெட்ரோல் போட்டு முடியும் வரை wait பண்ணுங்க..

வந்துட்டான்யா வந்துடான்யான்னு என்னை பார்த்ததும் பெட்ரோல் போடுபவற்க்கு ரொம்ப குழியாக இருந்து இருக்கும் போல. 150 ரூபாவிற்க்கு பெட்ரோல் போடுங்க.

.பெட்ரோல் hose controllerயை அழுத்தியது போல இருந்தது.. 50 ரூபாவை மீட்டர் காட்டியது.. மிசின் struck ஆனது.. பின் reset செய்து 100 ருபாவிற்க்கு பெட்ரோல் போடப்பட்டது.. அதன் பின் அத்தனையும் சங்கர் படத்தில் வருவது போலவே இருந்தது... ..1

50 ரூபாவிற்க்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கனும்.. ஏற்கனவே பைக்கில் இருந்த 2 லிட்டர் சேர்த்து இப்போ 5 லிட்டர் பெட்ரோல் இருக்கனும்.. ஆனால் கணக்கில் வந்ததோ 4 லிட்டர்..

கையும் களவுமாக பிடிபட்டார்கள்,,,,,
விஜிலென்ஸ் அதிகாரி ..ஓனரை கூப்பிடு ..
அவரு இல்லை சார்..
பெட்ரோல் போடுறதை நிறுத்து...
பின்னால் குறைந்தது 20 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்..

டேய் ப்ராடு பண்றதை நிறுத்தவே மாட்டீங்களா.. சத்தம் பெரிதானது.. பின்னால் இருந்த கூட்டமும் சேதி தெரிந்து கூட்டம் பெரிதானது..

கேஸ் போடுங்க சார்.. பங்கை இழுத்து மூடுங்க சார்..எனக்கும் இதே பிரச்சனை தான் சார்..பின்னால் இருந்து பல குரல்கள்..

இப்போ விஜிலென்ஸ் அதிகாரி..முதல்ல இவருக்கு சுட்ட பெட்ரோலை திரும்ப கொடு.
பெட்ரோல் மீண்டும் போடப்பட்டது...

பெட்ரோல் போடும் பையனை பார்த்தேன் 17 வயது இருக்கலாம்..கூடவே அவரின் சக பணியாளர்கள்.. யாருக்கும் வயது இருபதை தாண்டாது..

சார் இதுல ஒரு கை எழுத்து போடுங்க. *** *** பங்கில் இந்த நாள் இத்தனை மணி அளவில் முறைகேடு நடந்ததை கண்டு பிடித்தோம். அதற்க்கு சாட்சியாக அருண் குமார் என்ப்படும் இந்த நபர்.. இந்திய அத்யாவச பொருட்கள் சட்டபடி... பின்னர் நிறைய எழுதி இருந்தது..

நான் அவரிடம்...சரி சார் இனிமே இப்படி நடக்காதா?? பங்க் ஓனர்கள் முதல் அனைவரும் தண்டிக்கபடுவார்களா?

அது பெரிய பார்மாலிட்டி சார்.. நாங்க இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பனும்.. அதுக்கு இவங்க பதில் அனுப்பனும்... அப்புறம் நாங்க ஆதாரத்தை எங்க மேலதிகாரிக்கு அனுப்பனும்.. பார்க்கலாம் சார்..

கண்டிப்பாக பங்க் உரிமம் தடை அல்லது வேலை ஆட்கள் பணி நீக்கம் என ஏதும் நடக்க போவதில்லை என்று தெரிந்தது..

சரி..இப்படி பிரச்சனை செய்து என்ன தான் லாபம்??

தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்.. வரவேண்டும்.. அது வரை திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அவர்களை இப்படி செய்து தான் திருந்த வைக்க முடியும்..

Friday, August 21, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்



















அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரம் போவதே தெரியாமல் ரசிக்க ஒரு மசாலா படம்.

கதை என்ன ?

அது யாருக்கு வேண்டும்...


போஸ்டர் பார்த்தே கதை சொல்ல தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை என்ன தெரியாமலா இருக்கும்..


இந்தியன் அந்நியன் ஜெண்டில்மேன் டைப் கதைகளுக்கு சங்கர் காப்பிரைட் வாங்கி வைத்தால் ரொம்ப புண்ணியமாக போகும்.

என்ன எல்லாருக்கும் தெரிந்த கதையை அட்டகாசமாக திரைகதை ஆர்பட்டமான பாடல்கள் ஆட்டம் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.


முதல் சீனில் ஆரம்பித்து இடை வேளை மூச்சு விட நேரமில்லாமல் ஓடுகிறது
பின்னர் இடை வேளைக்கு அப்புறம் சிறிது தடுமாறி மீண்டும் புயல் வேகம் எடுக்கிறார்கள்..


ஆங்காங்கே வேக தடையாக சில பாடல்கள் அப்புறம் ரொம்ப முக்கியமாக வடிவேல் காமேடி..
வடிவேல் காமேடி படத்தோடு ஓட்டவே இல்லை..

படத்தின் நீளம் 3 : 15 மணி நேரம் , எடிடிங்கில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. தியேட்டர் ஆபரேட்டர்கள் இனி கவனித்து கொள்வார்கள்..


ரொம்ப ரொம்ப விக்ரம் ஸ்மார்டாக விக்ரம் படு கச்சிதமான நடிப்பு கூடவே உடல் மொழி வசன உச்சரிப்பு ..கலக்கீரீங்க விக்ரம்.. அதுவும் பெண் வேடத்தில் வரும் காட்சி ஏ கிளாஸ்


ஸ்ரேயா என்ன சொல்றது ...பாடல்களில் ஜிம்னாசியம் குச்சிபுடி பாக்சிங் என எல்லாம் கலந்து கட்டி ஆடுகிறார்.

’என் பேரு மீனா குமாரி’ பாடலுக்கு தியேட்டர் ஆபரேட்டரை தவிர எல்லாரும் நடனம் ஆடாத குறைதான்..

தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களும் பிண்ணனி இசையும் அபாரம் ..


படத்தின் ஒவ்வோரு ப்ரேமிலும் அபார உழைப்பு தெரிகிறது..
லாஜிக் மீறாத காட்சிகள் அதுவும் மெக்ஸிகோ நாட்டில் வரும் காட்சிகளும் அருமை..


பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா என எல்லாரும் வந்து போகிறார்கள் , வந்துட்டு போகட்டுமே .

.
சுசி கணேசன் இரண்டு வருடம் உழைத்து ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்..

பல மொக்கை படங்களை பார்த்து
நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..

Saturday, August 15, 2009

கண்டதும் கேட்டதும் - 15 08 2009




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்




ஒரு மாசமா ஏகப்பட்ட புது படங்கள் பார்த்து பைத்தியம் பிடிக்காத்து தான் மிச்சம்.


love aaj kal என்ற இந்தி படம்.. இந்த படத்தை எடுத்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைச்சா..




இப்ப வர இந்திபடங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பவே torture பண்றாங்க.. ஏதோ பீகார் ஹரியானா உபி மக்கள் எல்லாம் லண்டன் நீயூயார்க்க்கு மொத்தமா shift ஆகிட்டாங்களா?? எல்லா பட கதையில் நேரடியா லண்டன் பாரீஸ் இப்படிதான் ஆரம்பிக்குது..

இந்த வரிசையில் வந்த New york Love Aaj Kal என்று இரண்டு குப்பை படங்கள் .. இதில் Love Aaj Kal படத்தில் என்ன தான் சொல்லவராங்கன்னு ஒரு மண்ணும் புரியலை.. எப்படிதான் கலாசார காவல்கார சிவசேனா ஆர் எஸ் எஸ் கேங்க் ஆட்கள் இந்த படத்தை விட்டு வைச்சாங்களோ..

தமிழ் படங்கள் சற்றும் சளைத்தவை இல்லை..

சென்ற மாதத்தில் பார்த்த அபத்தங்கள்

சிந்தனை செய், வாமணன், மோதி விளையாடு ..

பல அபத்தங்களுக்கு மத்தியில் சரி புழைச்சு போன்னு வந்த படம் அச்சமுண்டு அச்சமுண்டு.. இந்த படமும் 1.30 மணி நேரம் என்றால் தப்பித்தேன்..

வழக்கமான தமிழ்பட விதியான 2 : 30 மணி நேர படம் என்றால் நினைச்சு பார்க்கவே முடியலை..

வாழ்க்கையில் பொறுமை போதும் அளவு கற்று கொண்டேன்.. விடுஙகடா சாமி ..

************************************************************************

பெங்களூரில் சென்ற வாரம் திறக்கபட்ட திருவள்ளுவர் இன்னமும் incubationல் தான் இருக்கிறார். எப்போதும் காவலுக்கு போலிஸ் மேலும் இலவச இணைப்பாக வீடியோ காமேராக்கள் கண்காணிப்போடு ரொம்ப பத்திரமாக இருக்கிறார்.

இதை பார்த்து எனக்கு திருச்சி திருவரங்கம் பெரியார் சிலை தான் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இன்னமும் திருவரங்கம் பெரியார் அதிரடி படை காவலோடு தான் காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும் பலத்த பாதுகாப்போடு தான் எழுந்து அருளி வருகிறார்கள்..

பேசாமல் காவல்துறையில் சிலை பாத்துகாப்பு துறை என தனியாக ஆரம்பித்து விடலாம்..

சிலைகள் திறப்பதால் என்ன நண்மை என நான் அறியேன் ஆனா வெட்டி வம்பு பார்டிகளுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.. வாழ்க வளர்க

******************************************************************************

எப்போதும் தமிழனுக்கு தான் பேசும் மொழி தொடர்பான அரசியல் ஆர்வம் அதிகம் உண்டு. கன்னடர்களுக்கு திருவள்ளுவர் வாழ்க்கை தமிழ் இலக்கியம் என சுய தம்பட்டம் அடிக்கும் பல ஆட்களை தினமும் காண்கிறேன்..

கூடவே கொசுறாக கல் தோன்றா மண் தோன்றா போன்ற பொன் மொழிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றி தமிழ் பெருமையை நிலை நாட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர்.

என்னவோ தெரியலை தமிழ் செல்வன் தமிழ் செல்வி போல இது வரை நான் கன்னட செல்வனோ தெலுங்கு செல்வியோ பெயர்களை கேள்வி பட்டதே இல்லை.. பேர் வைச்சுகிறது சொந்த விஷயம் ..சரி அதவிடுங்க.. இந்த கல் தோன்றா மண் தோன்றா தான் ரொம்பவே லாஜிக் இடிபடும் செய்தி.. யாராச்சும் இதற்க்கு விளக்கம் சொல்வீற்களா??

**************************************************************************

Friday, July 3, 2009

கொஞ்சம் புலம்பல்...




விகடன்....

இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.

குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..

வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..

அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.

புதுமை என்றால் அது விகடன் தான்

மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..

இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..


விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.


ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.

கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது

பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..

பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??

இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..

வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..

தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...

திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...

அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..

விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.

மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..

இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.

இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??

இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??

இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..


சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...

2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.

அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.


பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..

என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.

இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..